காளியம்மன் - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.
சிவந்த கண்களும் உயர்ந்த புருவமும் விரிந்த கூந்தலும்
வெளித் தெரியும் நாவில் ஓங்காரமும் ஒரு கையில் சூலமும்
மறுகையில் உடுக்கையும் வேப்பிலையும் கொண்டு நடமிடும்
தேவியே! சிங்கம் மீதேறி உலாவும் சிங்காரியே!
வீரகாளியே! காளியம்மனே! நீ வாழியம்மனே!
புங்கையம் பதியின் வடதிசையில் இறுப்பிட்டி எனும் ஊரில்
வந்தமர்ந்து கொண்டு சிறப்பூட்டி வைத்த தெய்வமே!
உனை வணங்கினோர் வாழ்வில் என்றும் இன்பமே!
வீரத்தை அள்ளித் தரும் வீரமாகாளியே! உனை
நம்பியவர் வாழ்வில் என்றுமில்லை தோல்வியே!
காளியம்மனே! நீ வாழியம்மனே!
நர்த்தனம் புரிகின்ற தேவியே! நீ இருக்கும் ஊரிலே இன்று
நரித்தனம் புரிகின்ற பாவிகள் செயல் கண்டு பாரா முகமேனோ?
வாள் கொண்டு தாக்குவாய்! அவர் வெறித்தனம் போக்குவாய்!
வெற்றித் திலகமிடுவாய்! நெற்றித் திலகம் காப்பாய்!
காளியம்மனே! நீ வாழியம்மனே!
ஆவின் பால் கொண்டுனக்கு அபிஷேகம் செய்தவர்
சாவின் பால் நிற்கின்றோம் தாயே! தங்கள்
நாவினால் உன் நாமம் உச்சரித்தவர் மருந்தின்றி; நோயினால்
துடிக்கின்றோம் தாயே! பூவில் உறைந்திருக்கும் தெய்வமே!
தீயில் நடனமிடும் தெய்வமே! – நீயிருக்கும்
கோயில் வழிபட்டு வந்தோம் எங்கள் வாழ்வில்
கோல விளக்கேற்றி வைப்பாய் தேவி!
எங்கள் ஊரைச் சீலமுற மாற்றி வைப்பாய் தேவி!
காளியம்மனே! நீ வாழியம்மனே!
0 comments:
Post a Comment