Tuesday, February 8, 2011

“தீவகம் புத்துயிர் பெறவேண்டும்” – மீள்குடியேறிய புங்குடுதீவு மக்கள்.

“எத்தனையோ துன்பங்களை இவ்வளவு காலமும் அனுபவித்து விட்டு இப்பதான் எங்கட ஊருக்கு வந்திருக்கிறம். இங்கேயும் நாங்கள் இன்னமும் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. ஒவ்வொருநாளும் பிரச்சினைகள்தான்” என்று கூறுகிறார்கள் புங்குடுதீவுக் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள பொதுமக்கள்.
யுத்தம் காரணமாகத் தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறிய தீவக மக்கள் சுமார் 20 வருடங்களின் பின்னர் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.


1990ம் ஆண்டு நடைபெற்ற தீவக இடம்பெயர்வின் பின் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் வாழ்ந்து வந்த இவர்கள், 1995ம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வின்போது வன்னிக்குச் சென்றனர்.
2002-2005 போர்நிறுத்த உடன்படிக்கை காலத்தில் இவர்களில் சிலர் சொந்த இடங்களுக்குத் திரும்பியிருந்தாலும், மீண்டும் மோதல்கள் ஆரம்பித்தபோது அச்சம் காரணமாக வன்னிக்கே திரும்பிவிட்டனர்.

“வன்னியிலே நாங்கள் கஸ்ரப்பட்டாலும் நிம்மதியாக வாழ்ந்தம்;. ஆனாலும், அங்க நடந்த யுத்தம் எங்களை ஒவ்வொரு இடமாத் துரத்தியது. வன்னியில எங்கட கால்படாத இடமே இல்லை. ஒவ்வொரு இடமாக ஓடித்திரிந்து கடைசியாக புதுமாத்தளன் சென்று, அங்கிருந்து தப்பிப் பிழைத்து வவுனியா வந்தம்” என்று வன்னியில் இறுதி யுத்த காலத்தில் தாம் பட்ட சிரமங்களை விளக்கினார் பெயர் குறிப்பிட விரும்பாத மீள்குடியேறிய குடும்பத் தலைவர் ஒருவர்.

சில மாதங்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தபின், சொந்த இடங்களுக்கு வந்தபோதும், தமது வாழ்வு இன்னமும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று அவர் வேதனைப்பட்டார்.

“நலன்புரி நிலையத்தில் நாங்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். இனி எங்கட ஊருக்குத்தானே போறம் என்று நினைத்துக்கொண்டு ஊருக்கு வந்தால், இங்கேயும் போக்குவரத்துப் பிரச்சினைகள், வேலையில்லாப் பிரச்சினைகள் என்று ஏராளமான பிரச்சினைகள்” என்று கவலை வெளியிட்டார் மற்றுமொரு மீள்குடியேறிய பொதுமகன்.
“ஆண்கள் வேலைக்குப் போய்விட்டால் பெண்கள் தனித்து வீட்டில் இருக்க முடியாது. என்றாலும் இங்குள்ள மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் கூடிவாழ்கிறோம்” என்று தமது இக்கட்டான நிலையை விளக்கினார் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர்.

“நாங்கள் எங்கட ஊருக்கு வந்து ஒரு வருடம் ஆகுது. நான் சிறிய சாப்பாட்டுக் கடை ஒன்றை நடத்திறன். ஆரம்பித்த காலத்தில நல்ல வியாபாரம் இருந்தாலும், இப்ப பல கடைகள் வந்தாப் பிறகு இலாபம் இல்லாமல் போய்விட்டுது” என்று கூறுகின்றார் சண்முகம் என்ற சிறிய கடை உரிமையாளர் ஒருவர்.

“எங்கட இடம் எல்லா வளமும் கொண்ட இடமாகத்தான் இருந்தது. ‘புங்குடுதீவு விரைவில் குட்டிச் சிங்கப்பூராக மாறும்’ என்று எங்களுடைய சர்வோதய அறங்காவலர் அடிக்கடி கூறுவார்” என்று கூறிய அவர்,

“ஆனால் இப்போது எங்கட இடம் இருந்த வளங்களையும் இழந்து பின்தங்கிவிட்டது. இதை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த கடுமையாக உழைக்கவேண்டும். தீவகம் விரைவில் புத்துயிர் பெறவேண்டும்” என்று மேலும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP