Monday, March 22, 2010

சுவிஸ் நாட்டில் ‘அறோ” என்ற மாநிலத்தில் நடந்த கல்யாண வீட்டு நிகழ்ச்சியொன்றில், நம்மவர்களால் நடாத்தப்பட்ட புதுமையான வீரசாகச விளையாட்டு!!

நம்மட நாட்டில சண்டை இப்பொழுது ஓய்ந்து விட்டது. ஆனால் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே நடக்கின்ற சண்டைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குடும்ப சண்டையிலிருந்து, பிரதேசம், குழு, ஊர், வட்டாரம், சாதி, என ஒருவருக்கொருவர் பகைமை காட்டி, பழைய கோபதாபங்கள், நானா, நீயா பெரியவர், சின்னவர் என பழைய பஞ்சாங்க கதைகள் பேசி, கங்கணம் கட்டிக் கொண்டு புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கும் போது வெட்கப்பட வேண்டிய விடயம். ஆனால் இந்த சண்டைகள் அடுத்த சந்ததிவரை தொடரும் போல் உள்ளது.. நேற்று (21.03.10) சுவிஸ் நாட்டில் ‘அறோ” கன்ரோன் என்ற இடத்தில் புங்குடுதீவு மக்களின் கல்யாணவீட்டு நிகழ்ச்சியொன்றில்; நடந்த சண்டையோ மிகவும் எம்மவர்களை அதிர்சியடைய வைத்தது. இப்படியொரு சண்டைக் காட்சியை சுவிஸ் பொலிஸ்காரர்களே சரித்திரத்தில் சந்தித்திருக்க மாட்டார்கள். கிட்டதட்ட 60க்கு மேற்பட்ட பொலிசாரும், 3அம்புலன்சு வண்டிகளும் சுவிஸ் பத்திரிகை நிருபர்களும் அங்கு நடந்த சண்டையில் பிரசன்னமாகியிருந்தார்கள் என்றால் நீங்களே கற்பணை பண்ணி பாருங்கள் இந்த சண்டையானது எப்படி நடந்திருக்கும் என்று..

புங்குடுதீவை சேர்ந்த, அதுவும் ஒரே சொந்தக்காரக் குடும்பத்தை சேர்ந்த இரு வீட்டாரின் கல்யாணவீட்டு நிகழ்சியில் தான் இந்த கைகலப்பு நடந்திருக்கிறது. முன்பு 83,85களில் சுவிஸில் புங்குடுதீவார்; யாழ்பாணத்தார் என்று சண்டை பிடித்தார்கள். பின்பு படிப்படியாக கல்யாணம் கட்டி பிள்ளை குட்டி என்று வந்தவுடன் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார்கள். அதுமட்டும் காரணமல்ல அன்றைய நேரத்தில் சுவிஸ் பொலிசாரின் கட்டுப்பாடுகள் மிகவும் சாந்தமாக இருந்தது ஆனால் இன்றோ அயல் நாட்டவரின் மீது சுவிஸ் பொலிசாரின் சட்டதிட்டங்கள் கடுமையாகப்பட்டுள்ளதால் நம்மவர்கள் இப்பொழுது அடக்கி வாசிக்கிறார்கள்.

இப்ப நமது நாட்டில சண்டை முடிந்து போனதால அதன் தொடர்ச்சியாக இங்கே தொடங்கி விட்டார்கள் போல்தான் தென்படுகிறது. நேற்றைய தினம் நடந்த சண்டையானது சிங்களவனுக்கோ தமிழனுக்கோ அல்லது யூகோகாரர்களிற்கும் இடையில் நடந்த சண்டையல்ல. ஒரே ஊர்காரர்களிற்கிடையில் (புங்குடுதீவு) ஒரே வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அதுவும் சொந்தகாரர்களின் கல்யாண வீட்டில் கலந்து கொள்ள வந்த ஒரே சகோதர குடும்பத்தை சேர்ந்தவர்களிற்கிடையில் நடந்த சண்டையாகும்.
நோர்மலாக கல்யாண வீடு, சாமத்திய வீடு, பிறந்தநாள் வீடு போன்ற நிகழ்சிகளில் ஆம்பிளைகள் நல்லா குடித்து போட்டு அவர்களின் வீரத்தை காட்டுவார்கள் அது வழமையானது தான். இப்பொழுதெல்லாம் கல்யாணவீடு போன்ற நிகழ்சிகளிற்கு குடிப்பதற்கு யூஸ் போத்தில் வாங்குவதை விட விஸ்கி போத்தில்கள் தான் கூடுதலாக வாங்குகிறார்கள்.

நேற்று நடைபெற்ற சண்டையோ ‘மது” போதையால் வந்த சண்டையல்ல மாறாக ‘மாதுக்களால்” வந்த சண்டையாகும். இந்த சண்டையோ மிகவும் சுவாரிசமான சண்டையாகும். ஏன்எனில் அங்கு நின்ற ஆம்பிளைகளும் ஆம்பிளைகளும் எதிர்த்து சண்டை பிடித்தார்களாம், பொம்பிளைகளும் பொம்பிளைகளும் எதிர்த்து சண்டை பிடித்தார்களாம். இதில் என்ன விசேசமான விடயம் என்றால் நீங்கள் நினைப்பது போல் பொம்பிளைகளும் பொம்பிளைகளுக்கும் இடையில் நடந்த சண்டை வெறும் வாய் சண்டையல்ல. பொம்பிளைகள் முதலில் கடும் சுத்தமான (தூசணம்) நல்ல தமிழில் வாய் சண்டையை தொடங்கினவையாம் தீடீரென கைகலப்புக்கு மாறி, கட்டியிருந்த சாறிகளையும் ஆளுக்கு ஆள் பிடித்து இழுத்து நின்று அடிபட்டவையாம். அங்கு நின்றிருந்த அமைதியான பெண்கள் (நூற்றுக்கு மேற்பட்ட), இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளும் மிகவும் பயந்து போய் யாபேரும் ஐயோ, ஐயோ எனக் குளறிக் கூக்கிரலிட்டு ஓரே நேரத்தில் பொலிசுக்கு ரெலிபோன் செய்தார்களாம்.
கல்யாணவீட்டு மண்டபத்துக்கு பக்கத்திலிருந்த சிறிய பொலிஸ் நிலையத்தார் ஓரேநேரத்தில் இவ்வளவுபேர் அழுதுகுளறி ரெலிபோன் செய்ததால் அவர்கள் சரியாக பயந்துபோய் அந்த மாநிலம் முழுவதும் தகவல் அனுப்பி கிட்டதட்ட 10-20 கார்களில் கல்யாண மண்டபம் நோக்கி விரைந்து வந்துதானாம் கலவரத்தை அடக்கியவர்கள்.

பொம்பிளைகள் போட்ட சண்டையை (அந்த கண்கொள்ளா காட்சியை) கலகம் அடக்க வந்த பொலிஸ்காரர்களோ கண்டு அதிசயத்து போனாங்களாம். பொலிசார் வந்த பிறகும் பெண்டுகள் சண்டையை நிறுத்தவில்லையாம். சில பொம்பிளையளை பொலிஸ்காரர் அவர்களின் கைகளை பின்னால் பிடித்து கைவிலங்கு போட்டு ஒரு மூலையில் கொண்டு போய் கடுமையாக எச்சரிகை செய்து இருத்திய பிறகுதானாம் பொம்பிளைகளின் சண்டை அடங்கியது. சுவிஸில் முதல்முறையாக தமிழ் பெண்களுக்கு பொலிசார் கைவிலங்கு போட்டதை இந்த நிகழ்ச்சியில் தானாம் பார்தவர்களாம் என அங்கு போனவர்கள் சொல்லுகிறார்கள். நிறைய ஆம்பிளைகளையும் கைவிலங்கு போட்டு பொலிசார் கொண்டு போனவங்களாம்.
மாப்பிளையும், பொம்பிளையும் போட்டிருந்த மாலைகளையும் கழட்டி எறிந்துவிட்டு காரில் ஏறி போய் விட்டார்களாம். நல்ல காலம் இந்த சண்டை கல்யாணவீட்டு நிகழ்ச்சி இடையில் நடக்கும் போது தொடங்கியிருக்கிறது. அல்லாவிட்டால் மொய் கொடுக்கிற கட்டத்தில் நடந்திருந்தால் யாராவது மொய்பெட்டியை அடித்துகொண்டு போயிருப்பாங்கள்.

அந்த நிகழ்சியில் கலந்துகொண்ட சில ஊர்காரர்களை நாம் விசாரித்த போது தெரிந்து கொண்டவைகள்….

புங்குடுதீவு மக்கள் சுவிஸில் நிறையபேர் வாழ்கிறார்;கள். 30வருடத்தில் எத்தனையோ ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் எங்கள் ஊர்காரர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்பொழுதும், ஒவ்வொரு சனி, ஞாயிற்று கிழமைகளிலும் தவறாமல் புங்குடுதீவு மக்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்றுதான் முதல்முதலாக இப்படியொரு சண்டையை பார்தோம் என்கிறார்கள். ஆண்கள் யாராவது சண்டை பிடித்திருந்தால் அவர்களை நாங்கள் மண்டபத்துக்கு வெளியில் கொண்டுபோய் விட்டிருப்போம். இந்த நாகரிக வளர்ச்சியடையாத, படிப்பறிவில்லாத சிலபெண்கள் சண்டை பிடித்ததால் தான் இவ்வளவுதூரம் பிரச்சினை வந்தது.
பாருங்கள்! எவ்வளவோ காசு செலவழித்து, அழைப்பிதல் அடித்து, ஊருக்கு எல்லாம் ‘காட்” கொடுத்து, எவ்வளவோ ஒழுங்குகள் செய்து கல்யாணம் செய்வது என்பது வாழ்வில் ஒருமுறை தான். இந்த சுவிஸ் நாட்டில் இருந்து இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த சம்பவத்தால் முழு புங்குடுதீவு மக்களுக்கும் அவமானம் என அங்கு நின்ற பலர் பேசி கொண்டிருந்தார்கள்.
தகவல் தந்தவர்.. கி.சத்தியா.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP