Sunday, October 4, 2020

ஒரு காதல்… உதவியாளர் ஆடிய நாடகம்… மிரட்டிய மோப்பநாய்: புங்குடுதீவு அர்ச்சகர் கொலையில் நடந்தது என்ன?

 


புங்குடுதீவில் பூசகர் நேற்று முன்தினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சந்தேகநபர்களாக சக அர்ச்சகர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த கொலை விவகாரத்தில் மேலும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு, ஊரதீவு சிவன் ஆலய அர்ச்சகரான இராசையா இராசரூப சர்மா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். அவர் கிளிநொச்சியை சேர்ந்தவர்.

கொலை நடந்த உடனேயே பல்வேறு விதமான ஊகங்கள் எழுந்திருந்தன. அரச்சகர் பிரதேசத்தில் சட்டவிரோத மாடறுப்பிற்கு எதிராக செயற்பட்டு வந்துள்ளார். சட்டவிரோதமாக மாடறுப்பவர்கள் தொடர்பில் பொலிசாருக்கும் தகவல் வழங்கி வந்தார். இதனால், மாடறுப்பவர்களே அவரை அடித்துக் கொன்றார்களா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எழுந்தது.

எனினும், விசாரணையில் முழுமையான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை

கடந்த 2ஆம் திகதி இரவு. 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு ஒரு அழைப்பு. புங்குடுதீவில் வீடு புகுந்த மர்மநபர்கள் தன்னை கட்டி வைத்துவிட்டு, வீட்டிலிருந்த அர்ச்சகரை கடுமையாக தாக்கி விட்டு சென்றுள்ளார்கள் என ஒருவர் தகவல் வழங்கினார்.

இதையடுத்து, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

குறிப்பிட்ட வீட்டில் பொலிசார் நுழைந்த போது, ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அறையொன்றிற்குள் ஒருவர் கட்டி வைக்கப்பட்டிருந்தார். அவரை விடுவித்த பொலிசார், உடனடியாக ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஊர்காவற்றுறை பொலிசார் தடயங்களை சேகரிக்க முயன்றனர். குறிப்பிடத்தக்க தடயம் எதுவும் இருக்கவில்லை. சிசிரிவி காணொளி கார்ட் டிஸ்க்கும் அகற்றப்பட்டிருந்தது.

இதன்மூலம், சாட்சியற்ற கொலையை நடத்தியதாக கொலையாளிகள் திருப்தியடைந்திருக்க கூடும்.

சம்பவ இடத்திற்கு ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் பார்வையிட்டார். சடலம் பிரேத பரிசோதனைக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடந்த பிரேத பரிசோதனையில், அர்ச்சகரின் பிடரியில் இரும்புக் கம்பியால் தாக்கியமையால் அவர் கொல்லப்பட்டார் என்பது தெரிய வந்தது.

அர்ச்சகரின் உதவியாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த விதுஷன் என்பவர் மட்டுமே சம்பவம் நடந்த இடத்தில் நின்றவர்.

மோப்ப நாயால் வெளியான உண்மை

விதுஷனின் மூலமே விசாரணையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியுமென்பது பொலிசாருக்கு தெரியும். அதனால் அவரிடம் விசாரணை நடத்தினர். சிலர் வீட்டுக்குள் புகுந்த தன்னையும் தாக்கி, அறைக்குள் கட்டி வைத்ததாக அவர் திரும்பத்திரும்ப சொன்னார்.

இதையடுத்து அவரது மேலாடையை கழற்றி சோதனையிட்டபோது, உடலில் காயங்கள் தென்பட்டன. அவை கீறல் காயங்கள். அவர் யாருடனோ மோதலில் ஈடுபட்டார் என்று சந்தேகிக்கத்தக்கவை. அது குறித்து விசாரித்தபோது, அவரிடமிருந்து திருப்திகரமான பதிலில்லை.

இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

மோப்பநாயின் மூலம் சோதனைக்குட்படுத்த முதல் பொலிசார் மீண்டும் விதுஷனிடம் விசாரணை நடத்தினர். மோப்பநாயிடமிருந்து யாரும் தப்ப முடியாது என்ற விடயத்தை கூறியபோது, விதுஷன் உண்மையை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்.

தானும், மேலும் இரண்டு அர்ச்சகர்களும் இணைந்தே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார்.


0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP