Monday, February 24, 2014

தீவகத்தை அடிமைப்படுத்தியோர் எவ்வித அபிவிருத்திகளிலும் ஈடுபடவில்லை!- வடமாகாணசபை உறுப்பினர்

கடந்த காலங்களில் அராஜக வழிகளில் தீவகப்பகுதியை அடிமைப்படுத்தி அட்டூழியம் புரிந்தோர், அம்மக்களுக்கு எதுவித அபிவிருத்தியையும் செய்யவில்லை, மாறாக அடிமைகளைப் போலவும், தமக்கு வாக்களிக்கும் இயந்திரங்களைப் போலவுமே பயன்படுத்தி வந்துள்ளனர். என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
ஆனால் எமது மக்கள் தேசியத்தின் பால் கொண்ட பெருவிருப்பினால், கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஒரே குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து தமது தேசியத்தின் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஊர்காவற்றுறை தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ப.தர்சானந், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் ஊர்காவற்றுறை பகுதியின் கட்சி செயற்பாட்டாளர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சரவணை சின்னமடு, ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனை, கரம்பன், புங்குடுதீவு ஆகிய பகுதிகளில் மதகுருமார், பொது மக்கள், சனசமூக நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள், இளைஞர்கள் ஆகியோருடன் சந்திப்புகளில் ஈடுபட்டனர்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த மாகாணசபை தேர்தலின் போது இத்தேர்தலுடன், தீவகத்திலிருந்து ஈ.பி.டி.பி எனும் கட்சியையே விரட்டியடிப்போம் என சபதமிட்டோம். இன்று மகத்தான மக்கள் ஆதரவுடன், அவர்களின் கோட்டை என அவர்கள் அட்டூழியம் புரிந்த ஊர்காவற்றுறை தொகுதியை அமோக வாக்குகளால் தமிழரசுக் கட்சி கைப்பற்றியதுடன், அராஜகவாதிகளின் அட்டூழியங்களுக்கும் முடிவு கட்டப்பட்டது.
மக்கள் தமது கருத்துக்களைக்கூட சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூட முடியாதவர்களாக உள்ளமையை நாம் உணரக்கூடியதாக உள்ளது.
அதை விட இதுவரை இப்பகுதியில் எவ்வித அபிவிருத்திப் பணிகளும் இடம்பெறவில்லை. இணக்க அரசியல் மூலம் என்ன அபிவிருத்தியை இப்பகுதி பெற்றுள்ளது? என நான் அவர்களைக்கேட்க விரும்புகின்றேன்.
 


வீதிகள் எதுவும் புனரமைக்கப்படவில்லை. பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட வீதிகளே இன்றும் சிதைவடைந்த நிலையில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தீவகத்தின் முக்கிய பிரச்சனையான குடிநீர்ப்பிரச்சனை மிகவும் மோசமாகக் காணப்படுகிறது.
மெலிஞ்சிமுனைப்பகுதியில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வரும் காணிகளுக்கு எதுவித அனுமதிப்பத்திரங்களோ, உறுதிகளோ வழங்கப்படாத நிலையில் இன்று அம்மக்களை அக்காணிகளை விட்டு வெளியேறுமாறு கூறப்படுகிறது.
எதுவித தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் மக்கள வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான பல பிரச்சனைகளை நாம் இனங்கண்டுள்ளோம். இவற்றையெல்லாம் உடனே தீர்க்க முடியாவிடினும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.
மாகாணசபையின் அமைச்சர்கள், முதல்வர் ஆகியோருடன் நான் இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடவுள்ளேன். எமது பாராளுமன்ற உறுப்பினர்களினது பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவிகளின் மூலமும் சில உதவிகளையும் பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் உறுதியளித்தார்.
இம்மக்கள் சந்திப்புகளில் பல அச்சுறுத்தல்களையும் மீறி மக்களும், பெண்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன், கூட்டமைப்பின் மீதான தமது ஆதரவினையும் தெரிவித்துக்கொண்டனர்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP