Sunday, January 15, 2012

தைப்பொங்கல் - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.

தை பிறந்தால் தைப் பொங்கல் பிறக்கும்
அத்தை மகள் வந்து விட்டால் இன்பத்தைக்
கொடுக்கும்! ஆண்டில் ஆரம்பமாகும் தைத்திருநாள்
இதுவே ஆனந்தம் பொங்கும் தைப்பொங்கல்
எனும் பொன் நாள்!

பசுவின் சாணம் குழைத்து ஒரு பிள்ளையார்
செய்வோம்! அழகாக அவர் மேலே அறுகம்
புல் வைத்து, அழகு மலர்கள் பறித்து வந்து
பக்கத்தில் வைப்போம்; மாவிலைகள் பிடுங்கி
வந்து தோரணமும் கட்டி வெற்றிலை, பாக்குத்
தேங்காயுடன் செவ்வாழையிலை வெட்டி வருவோம்!

வீடெங்கும் வாசைன நிரம்பிக் கமகமக்கும்
ஈழத்தமிழ் நாடெங்கும் தைப்பொங்கல் பொங்கி
மணக்கும்!

துயில் நீத்துக் கூவுகின்ற தமிழ்க் குயில்கள்
புதுத் துகில் புனைந்து செந்நெல் தந்த மணி
எடுத்து, மண் தந்த புதுப்பானை நீர் கொண்டு
அடுப்பேற்றி, வெண்பசுவின் பால் கறந்து பக்குவமாய்
அதை ஊற்றி ஆண்களுடன் அவர் தம் குலமாதர்
செய்வார்கள் சுவை கூட்டி! அதைப் பொங்கலென்று
சொல்வார்கள் பெயர் சூட்டி!

தமிழர் திருநாளில் சேர்க்கும் மா, வாழை, பலா
இம் முக்கனியின் சுவை கொண்டு விரும்பும்
செங்கரும்புமுண்டு! சர்க்கரை, கற்கண்டு, பாகு இவை
முதற் கொண்டு பொங்கி வழியும் பொங்கலின் நுரை
கண்டு இருள் கிழித்துச் செங்கதிரோன் வருவான்
வான வீதியில் உலா! தமிழர் உழவர் உள்ளங்கள்
அவனுக்களிக்கும் செய்ந்நன்றி விழா! இதுவே
தைப் பொங்கல் எனும் பெருவிழா!

மதுவுண்ட வண்டென மனதுகள் உவகையில் துள்ள
நெருப்புண்ட வெடிகள் செவிகளை அள்ள, குடிமனை
யாவையும் பொங்கலில் திளைக்க, ஆடிப்பாடி விளையாடும்
சிறார்களும் களைக்க, ஆரவாரத்தால் நம் உள்ளத்தை
நிறைத்து, தேவாரம் பாடிச் சூரிய தேவனுக்குப் படைத்து
எல்லோரும் ஒன்று கூடி மகிழ்ந்திருந்து உண்ணுவோம்
பொங்கல் எனும் பெரு விருந்து!

சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.


0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP